‘‘தேர்தலில் செலவு செய்வதற்கான பணம் மோடியின் விமானத்தில் எடுத்து செல்லப்படுவதால், அந்த விமானத்தையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்ய வேண்டும்,’’ என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.மேற்கு வங்கத்தில் 8 மக்களவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்தது. அன்று, 24 பர்கானஸ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாஜ வேட்பாளர் ஒருவரின் காரில் இருந்து ரூ.1,13,985 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இசட் பிளஸ், ஒய்பிளஸ் பாதுகாப்பு பெற்றுள்ள பாஜ தலைவர்கள் தங்கள் பாதுகாவலர்களை பயன்படுத்தி, தேர்தலில் செலவு செய்வதற்கான பணத்தை போலீஸ் வாகனத்திலேயே கட்டுக்கட்டாக எடுத்து செல்கின்றனர். இதை வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடிகளை கைப்பற்ற பாஜ திட்டமிட்டுள்ளது.