உலகம் முழுதும் சுத்தினீங்களே உங்க தொகுதிக்கு போனீங்களா? : மோடிக்கு பிரியங்கா கேள்வி

உபி.யில் உள்ள சிதார்த் நகர் மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேசியதாவது: தற்பெருமையில் மிதக்கும் பாஜ அரசு, மக்களிடையே கோபத்தையும், வெறுப்பையும், எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கி உள்ளது. விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, தனது பங்களாவை விட்டு வந்து 5 நிமிடங்கள் கூட விவசாயிகளை சந்திக்க  பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை. தற்போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் கிசான் சம்மன் யோஜனா பற்றி பேசுகிறார்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்படி காங்கிரஸ் கோரிக்கை விடுத்தபோது, பணமில்லை என்று மோடி கூறினார். ஆனால், அவர் பெரிய தொழிலதிபர்களின் ரூ.5.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். மோடியின் தொழிலதிபர் நண்பர்களின் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 10,000 கோடி லாபம் சம்பாதித்துள்ளன பிரதமர் மோடி மக்களிடம் பேசும் போது, தேவையற்ற பிரச்னைகள் குறித்து பேசுவார். உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஆனால், ஒருபோதும் தனது தொகுதியில் மக்களின் பிரச்னைகள் அறிய, சிறிய கிராமத்துக்கு கூட  சென்றதில்லை. இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Related Stories: