சூளகிரி: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்கள், பதிவேடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 150 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 60 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில், பள்ளியில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் அறையில் இருந்து நெருப்புடன் கரும்புகை பரவியது. தகவலறிந்து சூளகிரி போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தலைமை ஆசிரியர் அறையில் 10 பீரோவில் இருந்த அனைத்து ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமாகின.