துபாய்: இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பின் இப்தார் நிகழ்ச்சியில் குறிப்பாக தமிழகத்தில் நோன்பு கஞ்சி முக்கிய இடம் பெறும். மிகுந்த சுவையுடைய இந்த கஞ்சியை பல்வேறு தரப்பினரும் விரும்பி பருகுவர். இந்த நோன்பு தற்போது தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழகத்தை சேர்ந்தோர் இதன் சுவையை வெளிநாடுகளுக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.இவ்வருடம் ரமலான் மாதம் தொடங்கியதை அடுத்து உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் துபாயில் செயல்படும் தமிழ் அமைப்பான துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் வருடந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் துபாய் தேரா பகுதியில் 6 ஆயிரம் பேருக்கு இப்தார் வழங்க ஏற்பாடு செய்கின்றனர்.