திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி கோவிந்தராஜ் (65). இவரது மனைவி மேகலா உடல்நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துவிட்டார். கோவிந்தராஜுக்கு உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ் பல லட்சம் மதிப்புள்ள தனது 8 ஏக்கர் நிலத்தையும் 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்து விட்டார். சொத்துக்கள் தங்கள் கைக்கு வந்து சேர்ந்ததும் 3 மகன்களும் தந்தையை கைவிட்டு விட்டனர். வீட்டிலும் இருக்க விடவில்லை. சோறு இல்லாமல் வீட்டில் பட்டினி கிடந்த கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியேறி நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர் என்று பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து அங்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காசு, உணவில் உயிர் வாழ்ந்தார்.