பல்லாவரம்: பல்லாவரம் பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியில் வளர்ந்து வரும் பகுதியாக பல்லாவரம் திகழ்கிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், இறைச்சி, காய்கறி மார்க்கெட், பள்ளி, கல்லூரிகள், காவல் நிலையம், மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் கடந்த திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து கிண்டி மார்க்கமாகவும், சென்னையில் இருந்து தாம்பரம் மார்க்கமாகவும் இயக்கப்படும் மாநகர பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. தினசரி நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த பஸ் நிலையத்தை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், நிழற்குடை மேற்கூரை துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுகிறது. சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மேலும், சாலை பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.