பெங்களூரு: கர்நாடக முதல்வர் குமாரசாமி சிகிச்சையின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் குட்டிராதிகா இருப்பது போன்று மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த 6 நாட்களுக்கு முன் முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது தந்தை முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் உடுப்பியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்து இயற்கை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டனர். அங்கிருந்து நேற்று பெங்களூருவுக்கு திரும்பினர். இந்நிலையில் இணையதளத்தில் முதல்வர் குமாரசாமி மற்றும் நடிகை குட்டி ராதிகா ஆகியோர் உடுப்பி ஓட்டலில் தங்கியிருப்பதாக செய்தி வெளியிட்டு, இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் ஏப்.24ம் தேதி மர்மநபர்கள் வெளியிட்டிருந்தனர். இதுகுறித்து முதல்வரின் பத்திரிகை செயலாளர் போலீசில் புகார் செய்தார்.