மணலி அருகே வளைவில் திரும்பியபோது கன்டெய்னர் கவிழ்ந்து பல லட்சம் ஆயில் நாசம்: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூர்: மணலியில் கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் இப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்தவர் சுபாஷ் (26) கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று காலை மணலி புதுநகருக்கு செல்ல வேண்டிய இன்ஜின் ஆயில் நிரப்பப்பட்ட பேரல்கள் அடங்கிய கன்டெய்னர் பெட்டியை சென்னை துறைமுகத்தில் இருந்து  ஏற்றிக்கொண்டு மணலி சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். எம்எப்எல் சந்திப்பு அருகே வளைவில் திரும்பியபோது திடீரென நிலைதடுமாறி கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் லாரி டிரைவர் சுபாஷ் உள்ளே சிக்கிக்கொண்டார்.  இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சக டிரைவர்கள் விரைந்து வந்து சுபாஷை மீட்டனர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில்  பெட்டியின் உள்ளே இருந்த பேரல்கள் உடைந்து பல லட்சம் மதிப்பிலான ஆயில் வெளியேறியது. தகவலறிந்து மாதவரம் போக்குவரத்து  புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி கிரேன் மூலம் கன்டெய்னர் லாரியை மீட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: