கரகாஸ்: வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் கலவரம் வெடித்தது.வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த 2013ம் ஆண்டு முதல் நிக்கோலஸ் மதுரோ இருந்து வருகிறார். அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முறைகேடான வழியில் மதுரோ வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ குற்றம் சாட்டினார். இதனால், அரசியல்சாசனப்படி நான் தான் பொறுப்பு அதிபர் என கடந்த ஜனவரி 23ம் தேதி அவர் அறிவித்தார். இவரது போராட்டத்துக்கு அமெரிக்கா உட்பட 50 நாடுகள் ஆதரவாக உள்ளன. ராணுவத்தினரும் தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என குவைடோ வேண்டுகோள் விடுத்து வந்தார்.
இந்நிலையில், மதுரோவுக்கு எதிராக தலைநகர் கரகாசில் உள்ள விமான படைதளம் அருகே மிகப்பெரிய போராட்டத்தை நேற்று முன்தினம் குவைடோ நடத்தினார்.