சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பான்மசாலா, குட்கா விற்பனை ஜோராக நடந்து வருகிறது. புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையால் இப்பொருட்களை கடைக்காரர்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய தொடங்கினர். இப்பொருட்கள் எவ்வித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கட்டிட வேலைகள், ஓட்டல், தெருக்களில் போர்வைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வது பல தொழில்களில் வெளி மாநிலத்தவர் வேலை செய்து வருகின்றனர். வெளி மாநிலத்தவர் மற்றும் மாணவர்களை குறிவைத்தே இப்பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளுக்கு, பான் மசாலா, புகையிலை நிறுவனத்தின் பெயருடன் வந்து முன்பு பொருட்களை இறக்கி செல்வர். ஆனால் தற்போது பெயரில்லாத வேன்களில் வந்து மொத்தமாக இறக்கி செல்கின்றனர். இப்பொருட்கள் தடை செய்யப்பட்ட போது கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். நாளடைவில் சோதனை செய்வது குறைந்துவிட்டது. இதனால் தற்போது தட்டுப்பாடின்றி இப்பொருட்கள் கிடைக்கிறது.