ஆலந்தூர்: பழவந்தாங்கலில் நர்சிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பழவந்தாங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் சுதா (55). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார். இவர், கடந்த 23ம் தேதி நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சுதாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறிக்க முயன்றனர்.சுதாரித்துக்கொண்ட சுதா, செயினை பிடித்துக்கொண்டு அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, செயின் பறித்த மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். இதில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பினார். பிடிபட்ட நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.