லக்னோ: ‘‘எதிர்க்கட்சிகள் மீது பாஜ.வினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்’’ என மாயாவதி கூறியுள்ளார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் மீரட் நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, இரு மதங்களுக்கு இடையே மோதல் உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். இதுபோல் தியோபந்த் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மாயாவதியும், மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி, குறிப்பிட்ட கட்சியினருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கோரினார். இரு தலைவர்களும் பேசிய வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்திடம் அளித்து புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, பிரசாரத்தில் ஈடுபட மாயாவதிக்கு 48 மணி நேரமும், யோகி ஆதித்யநாத்துக்கு 72 மணி நேரமும் தடை விதித்தது தேர்தல் ஆணையம். 48 மணி நேர தடை முடிந்த நிலையில், மாயாவதி நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘பாஜ.வினர் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி எதிர்க்கட்சிகளை விமர்சிக்கின்றனர். அதோடு, எதிர்க்கட்சிகள்தான் மிக மோசமாக விமர்சிக்கின்றன என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். இப்படிப் பேசுபவர்களை பிரதமர் கூட கட்டுப்படுத்தவில்லை. இதற்காக எதிர்க்கட்சியினர் எல்லை தாண்டக்கூடாது. நாகரீகத்தை கடைப்பிடிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.