காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் அகமது படேல். குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். சோனியாவின் செயலாளராக பணியாற்றிவர். இவர், குஜராத்தில் உள்ள வதோதராவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜ அரசு தனது கொள்கைகளால் மக்களை துன்புறுத்தி வந்துள்ளது. இதனால், அந்த கட்சிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்து வருகிறார்கள். குஜராத்தில் தற்போது காங்கிரசுக்கு மக்களவை எம்பி.க்கள் யாரும் இல்லாத நிலையில், தேர்தலுக்கு பின் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 12 முதல் 15 தொகுதிகளை கைப்பற்றும். இந்தமுறை மக்கள் தவறான வழிகாட்டுதலுக்கு மயங்க மாட்டார்கள்.