காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் கழுத்தை நெரித்து பெண் கொலை: உறவினர் பிடிபட்டார்

தாம்பரம்: தஞ்சாவூர் ஒரத்தநாடு, பட்டுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகள் அகிலா (20). தாம்பரம் இரும்புலியூரில் தோழியுடன் தங்கி பல்லாவரம் தனியார் லேப்பில் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார். இவரது அக்கா அருள்மொழி. அருள்மொழியின் கணவர் சதீஷ் மற்றும் மைத்துனர் சந்தோஷ் (28) ஆகியோர் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் காந்தி தெருவில் வசிக்கின்றனர். சந்தோஷ் தனியார் கார் நிறுவனத்தில் டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் மற்றும்  அருள்மொழி சொந்த ஊருக்கு சென்றனர்.

கடந்த 9ம் தேதி இரவு சந்தோஷ் செல்போனில் அகிலாவை அழைத்து தனியாக பேச வேண்டும் என கூறி, தனது ரூமுக்கு அழைத்து வந்துள்ளார். இரவு இருவரும் ஒன்றாக வீட்டில் தூங்கினர். காலையில் அகிலா எழுந்திருக்காததால் சந்தோஷ் காரில் தாம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து அகிலா சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் விரைந்து சென்று அகிலா சடலத்தை மீட்டு. குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அகிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் பிடித்து விசாரித்தபோது அகிலாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து அகிலாவை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: