திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் 10 நாட்கள் நடப்பது சிறப்புக்குரியது. அதன்படி, சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன், மாலை 5 மணியளவில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து வரும் 19ம் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு நேரத்தில், சுவாமிக்கு மண்டகபடியும் நடைபெறும்.