மாலே: மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபரும் மாலத்தீவு ஜனநாயக கட்சித் தலைவருமான முகமது நஷீத் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.
மாலத்தீவில் 87 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இது, இந்நாட்டில் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து பதவி விலகிய பிறகு நடந்த முதல் தேர்தல். அதேபோல், முன்னாள் அதிபரான முகமது நஷீத் நாடு திரும்பிய நிலையில் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், இத்தேர்தல் மாலத்தீவு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், முகமது நஷீத்தின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, அடுத்து அமையவிருக்கும் அரசில் நஷீத் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நஷீத் பெரும்பான்மை வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு பிந்தைய முடிவுகள் தெரிவிக்கின்றன. 87 இடங்களில் 50 இடங்களில் இவரது மாலத்தீவு ஜனநாயக கட்சி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.