லோகித்பூர்,: மக்களவை தேர்தலுக்கான முதல் வாக்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை டிஐஜி செலுத்தினார். மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே மாதம் 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இந்த மக்களவை தேர்தலுக்கான முதல் வாக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையின் லோகித்பூர் விலங்குகள் பயிற்சி பள்ளியில் தலைவராக பணியாற்றும் டிஐஜி சுதாகர் நடராஜன் முதல் ஓட்டை நேற்று காலை 10 மணிக்கு பதிவு செய்தார். அவர் தனது தபால் ஓட்டை பதிவு செய்து, அதை சீல் வைத்து அனுப்பி வைத்தார். இந்த தேர்தலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 30 லட்சம் பேர் சர்வீஸ் வாக்காளர்களாக வாக்குபதிவு செய்ய உள்ளனர். சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்தோ திபெத் படை, தொழிற் பாதுகாப்பு படையினர் ஆகியோர் நாட்டின் எல்லையில் பணியாற்றினாலோ, நாட்டுக்குள் அல்லது வெளியே பணியாற்றும் ஆயுதப்படையை சேர்ந்த வீரர்கள் தங்களை சர்வீஸ் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டு வாக்களிக்கலாம்.