சென்னை: கி.வீரமணி கூட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாகனம் மீது இந்து முன்னணி வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. வீரமணி சனாதன மதவெறி பாசிசத்தை இனியும் அனுமதித்தால் நாடு தாங்காது என்று கருத்துரை வழங்கி வருகிறார். இதை தாங்கிக்கொள்ள முடியாமல், வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளனர். வீரமணி மீது தாக்குதல் நடத்த முனைந்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): பத்திரிகையில் கி.வீரமணியை தாக்க வேண்டும் என, கேள்வி பதில் பாணியில் செய்தி வந்தபோதே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், கோரியிருந்தது. தற்போது இந்து முன்னணியினர் பொதுக்கூட்ட மேடைக்கே சென்று தாக்கியுள்ளனர். இந்துத்துவ அமைப்புகள் கொலை நோக்கோடு தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை இனிமேலும் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் அனுமதிக்காது. தமிழக அரசு உடனடியாக அவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.