சென்னை: தென் சென்னை தொகுதியில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வார்டு வாரியாக பொதுமக்கள் மத்தியில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்து வருகிறார். மீனவர்கள், தொழிலாளர்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார். என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வேன், என வாக்குறுதி அளித்து வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்டு பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் எங்கள் வாக்குகளை அளிப்போம் என்று உறுதி அளித்து வருகின்றனர்.