கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் நிகில் குமாரசாமியை வெற்றி பெற வைக்கும் நோக்கில் அவரது வரிசை எண் ஒன்று என்பதை முதல்வர் குமாரசாமி அறிவித்தது அரசியல் வல்லுனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மண்டியா மக்களவை தொகுதியில் முதல்வரின் மகன் நிகில் குமாரசாமி மஜத வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை முதல்வர் குமாரசாமி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை பணிய வைத்து தனது மகனுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மார்ச் 25ம் தேதி நிகில் குமாரசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அன்று மண்டியாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘‘எனது மகன் நிகில் குமாரசாமியின் வரிசை எண் ஒன்று. அனைவரும் வேட்பாளர் பட்டியலில் உள்ள வரிசை எண் ஒன்றில் நிகில் குமாரசாமிக்கு வாக்களிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார். வேட்பு மனுத் தாக்கல் முடிந்த பின்னர், வேட்பு மனு பரிசீலனை, இதை தொடர்ந்து, வேட்பு மனு வாபஸ் பெறுவது, பின்னர்தான் இறுதியாக வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். ஆனால், நிகில் குமாரசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்த நாளன்றே தனது மகனின் வரிசை எண்ணை அறிவித்தது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.