தேனி: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து வரும் 13ம் தேதி பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் செய்ய உள்ளார். அன்றைய தினம் 2.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க அதிமுக மெகா திட்டம் தீட்டியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தபோது ‘மோடியா, லேடியா’ என அரசியல் அதிகாரப்போட்டி இருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் அதிமுக, மோடி சொல்படி செயல்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பாஜவோடும், ஜெயலலிதாவை அரசியல்ரீதியாகவும், தனிப்பட்ட முறையில் மிக மோசமாக வசைபாடிய பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவினர் எதிர்ப்பால் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத்குமார், வெற்றி குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரின் வற்புறுத்தலால் வரும் 13ம் தேதி ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரதமர் மோடி தேனியில் பிரசாரம் செய்ய உள்ளார். பிரதமர் மோடி தேனி வருவதால் மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.500 வரை கொடுத்து கூலிக்கு ஆட்களை ஏற்றிவர திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.