மத்தியில் பாஜ, காங்கிரஸ் கூட்டணி அல்லாத 3வது அணியே ஆட்சி அமைக்கும் என தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) மிக நம்பிக்கையுடன் உள்ளது. அக்கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகரராவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ், பிராந்திய கட்சிகள் இணைந்தே மத்தியில் ஆட்சி அமைக்கும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த 2014ல் இருந்த அளவுக்கு பாஜ இப்போது வலுவாக இல்லை. அப்போது 283 இடங்களில் வென்ற பாஜ, இந்த முறை 150 சீட்களை தாண்டாது. அவர்களின் பிரசாரத்தை பாருங்கள், புல்வாமா தாக்குதல், டிஆர்டிஓவின் செயற்கைக்கோளை தகர்க்கும் ஏவுகணை சாதனை போன்றவற்றைதான் ஓட்டாக்க பார்க்கிறார்கள். 5 ஆண்டில் அவர்கள் உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதால் பிரசாரத்தில் வளர்ச்சிப் பணிகள் பற்றி பாஜகவால் பேச முடியவில்லை. காங்கிரசும் நல்ல எதிர்க்கட்சியாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் இம்முறை 100 சீட் வெற்றி பெறுவதே சந்தேகம்தான். எனவே, மாநில கட்சிகளே மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருக்கப் போகின்றன. அப்படியிருக்கையில், தேர்தலுக்கு முன்பாகவே மாநில கட்சிகள் எதற்காக பாஜ, காங்கிரசின் பின்னால் சென்று அவர்களை பெரிதாக காட்ட வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசை விட காங்கிரஸ் வலுவானதா? தமிழ்நாட்டில் அதிமுக தயவில்லாமல் பாஜ ஒரு இடத்திலாவது வென்று விட முடியுமா? ஆகவே, தேர்தலுக்கு பிறகு பாஜ, காங்கிரஸ் அல்லாத 3 அணி நிச்சயம் சாத்தியமாகும்.