வேலூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு, உமர்ரோடு சந்திப்பில் உள்ள எம்ஜி ஆர் சிலையருகே நேற்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:வேலூர் மாவட்டம், மதநல்லிணக்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக உள்ள மாவட்டம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த ஒரு மத கலவரமும் நடக்கவில்லை. ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகள் இருந்த தினகரன் பதவி வெறி காரணமாக இந்த தேர்தல் நடக்கிறது. அவர்களிடம் சென்றவர்கள் அதிமுகவில் பொறுப்பில் இல்லாதவர்களே. இந்த இடைத்தேர்தலுக்கு காரணமான துரோகிகள் மீண்டும் தேர்தலில் நிற்காத அளவிற்கு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றார்.பின்னர் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே பேசுகையில், ‘சாதாரண தொண்டனான இந்த பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியவர் ஜெயலலிதா’ என்றார். குடியாத்தம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக ஆலமரம்போல் உள்ளது. அதன் விழுதுகளாக ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். சுனாமி வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. சபாநாயகரும் நானும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அழைத்தபோதும் கூட அதிமுகவில் இணைய தினகரன் மறுத்துவிட்டார்’ என்றார்.