நாகர்கோவில்: நாகர்கோவிலில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் வடசேரி ஆறாட்டு ரோட்டில் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அடிப்பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வாலிபர் சடலம் கிடக்கும் தகவல் அறிந்ததும் பொது மக்களும் திரண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்திய போது இறந்து கிடந்தவர் சிவமணி (38), வடசேரி வெள்ளாளர் கீழ தெருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்தது சிவமணி தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிவமணி உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.