சென்னை: இஸ்ரோவின் மினி சாட்டிலைட்டான ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் உதவியுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நாளை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டுகளை தயார் செய்து அவற்றில் செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24ம் தேதி கலாம் சாட், மைக்ரோசாட்-ஆர் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தநிலையில், இந்தியாவின் மினி செயற்கைக்கோளான ‘எமிசாட்’ மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களை ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நாளை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதில், அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்கள், சுவிட்சர்லாந்து, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள்கள் மற்றும் லுதுவேனியாவை சேர்ந்த 2 செயற்கைக்கோள்கள் என 4 நாடுகளை சேர்ந்த மொத்தம் 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட உள்ளது.