புதுடெல்லி: ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், பாஜ.வுக்கு ஆதரவாக பேசியதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் உத்தரப் பிரதேசம் அலிகார் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்தார். இதனால், கல்யாண் சிங் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் எனத் தெரிகிறது. ராஜஸ்தான் ஆளுநராக இருப்பவர் கல்யாண் சிங். இவர் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர். இவர் உபி மாநிலம், அலிகரில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த 23ம் தேதி சென்றார். அப்போது, தேர்தலில் சீட் ஒதுக்கியதில் அதிருப்தியடைந்த பா.ஜ நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வீட்டில் சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசிய ஆளுநர் கல்யாண் சிங், ‘நாம் எல்லாம் பாஜ தொண்டர்கள். நமது கட்சி ஜெயிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். மோடி ஜி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாம் விரும்புகிறோம்’ என பேசினார். அரசியல் சாசன பதவியில் இருப்பவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.