மக்களவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோவை கணபதி பகுதியில் பா.ஜ.க.வின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அவரின் வருகைக்காக பா.ஜ.க., அ.தி.மு.க.வினர் வந்திருந்தனர். இதையடுத்து, வேட்பாளர் ராதாகிருஷ்ணனை தனது வாகனத்தில் ஏற்றாமல் அவரை வேறு வாகனத்தில் நிறுத்தி வைத்து மக்களிடையே பேசினார். பிரசாரத்தில் பேசிய பிரேமலதா, ``சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முரசு சின்னத்தில் ஓட்டு போடுங்க...’’ எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். உடனடியாக சமாளித்த அவர் ‘சாரி’ தாமரைக்கு ஓட்டு போடுங்க... என கூறினார். இதைகேட்டு மக்களும், கூட்டணி கட்சியினரும் அதிர்ந்தனர்.