மண்டபம்: தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கிமீ தூரத்தை பத்தரை மணிநேரத்தில் கடந்து தேனி சிறுவன் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜெய் ஜஸ்வந்த் (10). நான்காம் வகுப்பு மாணவர். இவர் தேனியில் கடந்த 2017ல் நடந்த மிக விரைவு மினி மாரத்தான் நீச்சல் போட்டியில், 4 கிமீ தூரத்தை 81 நிமிடங்களில் நீந்தி சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில நீச்சல் போட்டிகளில் பங்கேற்று நிறைய பதக்கங்கள் மற்றும் தனிநபர் சாம்பியன் கோப்பைகளை வென்றுள்ளார். கர்நாடகாவில் கடந்த பிப். 9 மற்றும் 10ம் தேதியில் நடந்த 11 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் போட்டிக்கு ஜெய் ஜஸ்வந்த் தகுதி பெற்றார்.