புதுடெல்லி: நீரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு உதவ இந்திய அதிகாரிகள் குழு நேற்று லண்டன் புறப்பட்டது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடிக்குமேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீரவ் மோடி, அவரது குடும்பத்தினரை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் நீரவ் மோடி தங்கியிருப்பதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதையடுத்து அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அவருக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் கடந்த வாரம் அவரை கைது செய்த இங்கிலாந்து போலீசார், வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.