சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே மணல் கடத்தலை தடுத்தவர்கள் மீது, பயங்கர தாக்குதல் நடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி கிராமம், செய்யாற்றுப் படுகையில் மணல் அள்ளுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், ஓதலவாடி செய்யாற்றுப் படுகையில் மர்ம நபர்கள் சிலர், 2 மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த ஓதலவாடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், ராஜசேகர், ராமதாஸ் ஆகிய 3 பேரும் அங்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது மணல் அள்ளியவர்களுக்கும், இளங்கோவன் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து மணல் கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக சுமார் 25 பேர் வந்தனர். அவர்கள் கம்பு மற்றும் கத்தியால் இளங்கோவன் உள்ளிட்ட 3 பேரையும் பயங்கரமாக தாக்கினர். இதில் ராஜசேகர், ராமதாஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இளங்கோ லேசான காயங்களுடன் தப்பினார்.