புதுடெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடற்படை தளபதியாக இருக்கும் சுனில் லம்பாவின் 3 ஆண்டு பதவிக் காலம் வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய தளபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நடந்தது. இதில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதல் கடற்படை தளம் என பெயர் பெற்ற விசாகப்பட்டினதை தலைமையகமாக கொண்ட கிழக்கு கடற்படை மண்டலத்தின் தலைவராக இருக்கும் கரம்பீர் சிங், கடற்படை துணை தளபதி ஜி.அசோக் குமார், மேற்கு கடற்படை தலைவர் அஜித் குமார், தெற்கு கடற்படை தலைவர் அனில் குமார் சாவ்லா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் இறுதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் மே 31ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.