கடந்த 2014 மக்களவை தேர்தலில் வதோரா, வாரணாசி ஆகிய இரண்டு தொகுதியில் மோடி போட்டியிட்டார். இரண்டிலும் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து வதோரா தொகுதியில் ராஜினாமா செய்தார். இதே போன்று இம்முறை மக்களவை தேர்தலிலும் வாரணாசி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியில் நரேந்திரமோடி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 21 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தெற்கு பெங்களூரு தொகுதியில் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் மனைவி தேஜஸ்வினியை களமிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் தென்னிந்தியாவில் பாஜ கட்சி பலமாக உள்ள கர்நாடக மாநிலத்தில் தெற்கு பெங்களூரு தொகுதியில் மோடி போட்டியிட்டால், மக்களவை தேர்தலில் பாஜ கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பாஜ மாநில தலைமை நம்புகிறது. எனவே பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.