சென்னை: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு பதில் மயில்வேல் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளன. அதில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 17ம் தேதி அதிமுக சார்பில் போட்டியிடும் மக்களவை மற்றும் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக முருகன் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், முருகன் மீது கட்சி பிரமுகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின.