சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. தாளவாடியிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள கொங்கள்ளி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் மல்லிகார்ஜூனசாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமியை அழைத்தபடி மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய நடனமாடியபடி பக்தர்கள் கோயிலை சுற்றியபடி குளத்திற்கு சென்றனர். குளத்தில் பூஜைகள் செய்தபின் கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூசாரி கவியப்பதேவர் பக்தி பரவசத்துடன் இறங்கி நடந்து வந்தார்.