பண்ருட்டி, மார்ச் 5: பண்ருட்டி அருகே அமைச்சர் எம்.சி. சம்பத், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே நேற்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கும் இடையே அடிக்கடி அரசியல் மற்றும் திட்டப்பணிகள் சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ ஆதரவாளர்கள் புறக்கணிப்பு செய்தும் வருகின்றனர். சில மாதத்துக்கு முன் மேல்குமாரமங்கலத்தில் பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழாவில் இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். தொடர்ந்து எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவிலும் பண்ருட்டியில் இருவரும் தனித்தனி கோஷ்டியாக பிரிந்து மாலை அணிவித்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் நேற்று பண்ருட்டி அருகே ஒறையூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்ள கடலூர் எம்பி அருண்மொழித்தேவன், பண்ருட்டி எம்எல்ஏ சத்யாபன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி காரில் வந்தனர். அங்கிருந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களான ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் கனகராஜ் மற்றும் சிலர் திடீரென எம்பி காரை முற்றுகையிட்டனர். எங்களுக்கு அழைப்பிதழை கொடுக்காமல் எப்படி விழா நடத்தலாம் என கேள்வி எழுப்பினர். இதற்கு எம்பி அருண்மொழித்தேவன் அதுபற்றி விசாரிக்கிறேன், முதலில் விழாவுக்கு வாருங்கள் எனக் கூறி அழைத்தார். ஆனால் யாரும் செல்லவில்லை.