மதுரை: நீர் மேலாண்மையை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்தினால், தமிழகத்தில் வறட்சியே இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை இல்லாமல் மிகவும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கின்போது கொள்ளிடத்தில் பாலங்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. எங்களது 85 ஆண்டு கோரிக்கையான கொள்ளிடம் காவிரி உபரிநீரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அக்னி ஆறு, தெற்கு வெள்ளாற்றுடன் இணைத்தால், மாவட்டம் முழுவதும் விவசாயம் பயன் பெறும், குடிநீர் பிரச்னை தீரும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.