தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு ; தரமானதை மட்டும் வாங்கும்படி அதிகாரி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் போலீசாரின் தீவிர சோதனை காரணமாக, ‘போலி ஹெல்மெட்’ விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதை வாங்கி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட தரமான ெஹல்மட் மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தில் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில், இரு, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இருசக்கர வாகனங்கள், 2.15 கோடிக்கு மேல் உள்ளன. மேலும் மோட்டார் கார்களின் எண்ணிக்கை, 24 லட்சத்துக்கும் மேலாக இருக்கிறது.

இந்நிலையில் பல வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியாமலும், சீட் பெல்ட் போடாமலும், மது குடித்துவிட்டும், மொபைல் போன்களில் பேசிக்கொண்டும், ஒருவழிப்பாதையில் பயணிப்பது ேபான்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி, அவர்கள் இறப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. கடந்த, 2018ம் ஆண்டில் மாநிலம் முழுவதும், 59 ஆயிரத்து 277 விபத்துக்கள் நடத்துள்ளது. இதில், 11 ஆயிரத்து 266 பேர் இறந்துள்ளனர். இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் நடக்கின்றன. இதைக்கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தீவிர ஆலோசனை நடத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விபத்துக்களை தடுக்க பல்வேறு வழிமுறைகளை வகுத்து, அதுபோல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், ‘ஹெல்மெட்’ அணியாத வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை, சேலம், திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அதிகப்படியான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஒருசிலரை தவிர பலர் ‘ஹெல்மெட்’டுகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதன்காரணமாக ஆங்காங்குள்ள ‘ஹெல்மெட்’ விற்பனை செய்யும் கடைகளில், விற்பனை அதிகரித்துள்ளது. நகரங்களில் சில இடங்களில் சாலையோரங்களில் கூட வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதில் பெரும்பாலானவை தரமற்றதாக இருக்கிறது.

அரசு ‘ஐஎஸ்ஐ’ முத்திரை கொண்ட தலைகவசத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியிருப்பதால், அதுபோல போலியான முத்திரை சில ‘ஹெல்மெட்’களில் உள்ளது. இதை உண்மையென நம்பி பல வாகன ஓட்டிகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்துவதால் விபத்து நேரத்தில் பாதுகாப்பு இருக்காது என போக்குவரத்துத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்துத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:  விபத்தின் போது 80 கிலோ எடை கொண்ட ஒருவர் கீழே விழும் போது 800 முதல் 1,600 கிலோ வேக பலத்தில் விழுவார். 800 கிலோ வேக பலம் தாக்கினாலே மனித மண்டையோடு உடைந்துவிடும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலை ஏற்படும்.

எனவே இதைவிட பலமடங்கு அதிக பலம் தலையை தாக்கினாலும், அதைதடுக்கும் வேலையை தான் ‘ஹெல்மெட்’ செய்கிறது. இதை ‘ஐஎஸ்ஐ’ தரம் கொண்ட ‘ஹெல்மெட்’டால் மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான ‘ஹெல்மெட்’டுக்கு ‘பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்’ எனும் பி.ஐ.எஸ் நிறுவனம் தரச்சான்றிதழ் கொடுக்கிறது. அதன்கீழ் வரும் ஐஎஸ் 4151 பிரிவில்தான் ‘ஹெல்மெட்’டின் தர விதிகள் உள்ளன. இதன்படி ஏபிஎஸ் என்று சொல்லப்படும் ஒருவகை உயர் தரமுடைய பிளாஸ்டிக் பொருளை மேல்பகுதியாக பயன்படுத்த வேண்டும். அதன் இடைப்பட்ட பகுதியில் அதாவது நடுப்பகுதியில் அடர்த்தியான தெர்மாகோல் இருக்க வேண்டும்.

இதுதவிர சின் ஸ்ட்ராப் எனப்படும் தாடை நாடா எவ்வளவு இருக்க வேண்டும், தலைக்கு ஏற்ற மாதிரி என்ன வடிவத்தில் உட்புறம் இருக்க வேண்டும் என்பது எல்லாம், அந்த விதியில் இருக்கிறது. இந்த ‘ஹெல்மெட்’களில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடவே ஐஎஸ் 4151 என்ற குறியீடும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விதிகளுக்கு மாறாக சிமென்ட், பேப்பர் கூழை இறுக வைத்து தயாரிக்கப்படும் ஹெல்மெட் விலை மலிவாக சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதிக பாதிப்பை தாங்கக்கூடிய அடர்த்தியான தெர்மாகோலுக்கு பதிலாக தடிமன் இல்லாத தெர்மாகோல் பயன்படுத்தப்படுகிறது.

இதைபயன்படுத்துவதால் எவ்விதமான பலனும் ஏற்படாது. எனவே தரமான ‘ஹெல்மெட்’டுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அதேபோல் தலையின் அளவுக்கு ஏற்ப சரியாக ஃபிட் ஆகும் ‘ஹெல்மெட்’டை மட்டுமே வாங்க வேண்டும். லூசாக இருந்தால் அடிபடும் போது தலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். மேலும் சதுரம், கூம்பு போன்ற வடிவங்களை கொண்ட ‘ஹெல்மெட்’களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரவுண்டாக இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அணியும்போது ஒருவிரல் அல்லது இருவிரல் மட்டும் செல்லக்கூடிய அளவில் நாடாவை அணிந்துகொள்ள வேண்டும். மேலும் லாக்குகளும் சுலபத்தில் விலகி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: