புதுக்கோட்டை: புதுக்கோட்டை உசிலங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் மேற்பார்வையாளர். இவரது மனைவி செண்பகவல்லி. தனது மாமன் மகளான செண்பகவல்லியை காதலித்து வந்தார். இவரது காதலை செண்பகவல்லியும் ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தங்களது காதலை பெற்றோரிடம் தெரிவித்து, கடந்த 1958ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு 8 பிள்ளைகள். அவர்கள் அனைவரையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு செண்பகவல்லி உடல் நலக்குறைவால் இறந்தார். பிள்ளைகள் தனித்தனியாக வசிப்பதால், சுப்பையாவை தனிமை வாட்டியுள்ளது. தனது காதல் மனைவியின் நினைப்பிலே வாழ்ந்து வருகிறார். தனது காதல் மனைவிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதை தொடர்ந்து 3 லட்ச ரூபாய் செலவில் தனது மனைவி செண்பகவல்லிக்கு 3.5 அடியில் ஐம்பொன்னில் திருவுருவசிலையை செய்துள்ளார்.