சென்னை: சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ₹396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிடப்பட்ட அறிவிப்பு: சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலைைய ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடைப் பூங்கா ஒன்று சுமார் ₹396 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். மூன்று பிரிவுகளாக அமைய உள்ள இப்பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, புலிக்குளம் மற்றும் பர்கூர் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கப் பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாட்டின பண்ணை, பன்றிகள், கோழியினப் பிரிவுகள் அமைக்கப்படும்.