திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் நேற்று முன்தினம் மாலை 5.15 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் கார் மூலமாக திருமலைக்கு சென்ற அவர் பத்மாவதி நகரில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். தொடர்ந்து நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர். ராஜபக்சே வருகையையொட்டி ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் அவர் தங்கிய விருந்தினர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.