சென்னை: தனி நீதிபதியின் மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மீது உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த டாக்டர் சங்கர் தாக்கல் செய்த மனுவில், “ தன்னை பதிவாளர் பணியில் இருந்து பல்கலைக்கழக நிர்வாகம் விதிமுறைகளுக்கு முரணாக நீக்கியுள்ளது. தன்னை பணியில் மீண்டும் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துணை வேந்தர் வணங்காமுடி (தற்போது ஓய்வு) சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதி, பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் உரிய கல்வித் தகுதி கடைபிடிக்கப்படவில்லை. எனவே, கல்வித் தகுதி இல்லாதவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து அது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் துணை வேந்தர் சாஸ்த்ரி, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 34 பேரை சேர்க்குமாறு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று உத்தரவிட்டார்.