சென்னை: சென்னையில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி சுமார் 7 மணி 2 நிமிட அளவில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவி பகுதிகளில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வால் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என கூறினார்.