வேலூர்: வேலூரில் ஊர்க்காவல் படையில் மாதம் 5 நாட்கள் வேலையுடன் ரூ.2,800 சம்பளத்துக்கு 800 பொறியாளர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வினியோகம் கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர வயது வரம்பு 18 முதல் 50 வரையிலும், கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்படி, கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் விண்ணப்பங்களை வாங்க வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் குவிந்தனர். 2 நாட்கள் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டதில் 6 ஆயிரத்து 74 பேர் விண்ணப்பம் வாங்கி சென்றுள்ளனர்.