வேலூரில் மாதம் ரூ.2,800 சம்பளத்துக்கு ஊர்க்காவல் படையில் சேர 800 இன்ஜினியர்கள் விண்ணப்பம்

வேலூர்: வேலூரில் ஊர்க்காவல் படையில் மாதம் 5 நாட்கள் வேலையுடன் ரூ.2,800 சம்பளத்துக்கு 800 பொறியாளர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்  விண்ணப்பித்துள்ளனர். வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வினியோகம் கடந்த 7  மற்றும் 8ம் தேதிகளில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பணியில் சேர வயது வரம்பு 18 முதல் 50 வரையிலும், கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத  மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்படி, கடந்த 7 மற்றும் 8ம்  தேதிகளில் விண்ணப்பங்களை வாங்க வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள்  குவிந்தனர். 2 நாட்கள் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டதில் 6 ஆயிரத்து 74 பேர் விண்ணப்பம் வாங்கி சென்றுள்ளனர்.

 இதில் 800 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களும் நூற்றுக்கணக்கில்  விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.  கடந்த முறை ஊர்க்காவல் படைக்கு 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது 500 பேர் மட்டுமே வந்திருந்தனர்.  ஆனால், இந்த ஆண்டு 51 பணியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த பணியில் சேருபவர்களுக்கு மாதம் 5 நாள் மட்டுமே வேலை  வழங்கப்படும். ஒரு நாளைக்கு ரூ.560 என 5 நாட்களுக்கு ரூ.2,800 வழங்கப்படும். இதில் சேர பொறியியல், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள்  விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: