துரைப்பாக்கம்: இசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த நைஜீரியா நாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ்காந்தி சாலையில் அதிகமாக ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. வார விடுமுறை நாட்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகங்கள், பண்ணை வீடுகள் மற்றும் தியேட்டர்களுக்கு சென்று ஜாலியாக பொழுதுபோக்குவது வழக்கம். இவர்களை குறிவைத்து போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.