சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் வரும் 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சிஐடியு மாநில தலைவரும், சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயிஸ் யூனியன் தலைவருமான சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி :சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் நிலைய கட்டுப்பாட்டாளர் இல்லாமல் இயக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை நிர்வாகம் கைவிட வேண்டும். மெட்ரோ ரயில் ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.