வீரவநல்லூர்: நெல்லை அருகே பழிக்குப்பழியாக, சென்னை லாரி டிரைவர்கள் இருவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுெதாடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடர்மணி (26). இவரது நண்பர் கோவில்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் கணேசன் என்ற துரைப்பாண்டி (37). இருவரும் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நெல்லை கோர்ட்டில் ஆஜராக சென்னையில் இருந்து வந்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை அருகே கான்சாபுரத்தில் உள்ள தாத்தா சாமிநாதபிள்ளை வீட்டுக்கு நண்பருடன் சுடர்மணி வந்தார். வீட்டுக்கு வெளியே அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 5 பேர் கும்பல், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி அருண்சக்திகுமார், சேரன்மகாதேவி ஏஎஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் கொலை நடந்த பகுதியை பார்வையிட்டனர். விசாரணையில் இரட்டை கொலை நடந்தது ஏன் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சுடர்மணியின் தங்கைக்கும், கிளாக்குளத்தை சேர்ந்த பழனி மகன் செல்வம் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்ததும் பெற்றோர் அவரை கண்டித்தனர்.