சென்னை: மணல் திருட்டு வாகனங்களை திரும்பப்பெற சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்வரை மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த எம்.சக்கரவரத்தி. இவரது டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த டிசம்பர் மாதம் பூந்தமல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லாரியை விடுவிக்கக்கோரி சக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட வருவாய் வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, தனது லாரியை விடுவிக்குமாறு உத்தரவிடக்கோரி சக்கரவர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.பி.மோட்சம் ஆஜரானார்.