கொல்கத்தா: ‘‘உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைத்திருப்பது சரியான வியூகம்தான்’’ என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், பாஜ.விடம் தோல்வியை தழுவின. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்காக சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில், காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எம்பி.க்களாக உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடவில்லை. இந்த கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடப்பட்டதால், 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.