சென்னை : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவன் உட்பட 3 பேரை 8 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சராமரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த மபொசி நகரை சேர்ந்தவர் ஆகாஷ்(19). கல்லூரி மாணவன். அவரது நண்பர்கள் சதீஷ்(25), விமல்(24). இவர்களும் அதே பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் 3 பேரும் நேற்றிரவு 8.45 மணி அளவில் கும்மிடிபூண்டி ரயில் நிலையம் அருகே பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
இவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் திடீரென வழிமறித்தது. பயங்கர ஆயுதங்களுடன் 3 பேரையும் கொலை செய்ய முயன்றதால், அவர்கள் உயிர் பயத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால் முதலில் கல்லூரி மாணவன் ஆகாஷை மறித்த கும்பல் அரிவாளால் சராமாரியாக வெட்டினர். உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த ஆகாஷை அங்கேயே போட்டுவிட்டு மற்ற இருவரையும் அந்த கும்பல் துரத்த தொடங்கியது.
20 மீட்டர் தொலைவில் சதீஷை மடக்கி வெட்டினர். தலையில் பலத்த வெட்டுபட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொடூர ஆயுதங்களை காட்டிக் கொண்டு கொலை வெறியில் விரட்டியதால் பொதுமக்கள் யாரும் அந்த கும்பல் அருகில் செல்ல முடியவில்லை. அடுத்த 50 மீட்டர் தொலைவில் நடுரோட்டில் விமலை வெட்டி சாய்த்தது அந்த கும்பல். உடலில் பல இடங்களில் வெட்டுபட்ட விமல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஒரே நேரத்தில் 3 பேரை விரட்டி விரட்டி கொலை செய்த அந்த கும்பல் அங்கிருந்து சர்வ சாதாரணமாக ஆயுதங்களுடன் தப்பி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆகாஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவரது உயிரும் பிரிந்தது. தகவல் கிடைத்து கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். சம்பவ இடத்தில் வெட்டுபட்டு கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரைணயில், முன்விரோதம் காரணமாக இந்த படுகொலைகள் நடந்தது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கும்மிடிபூண்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் வழக்கு பதிந்து படுகொலையின் பின்னணிகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி