கோவில்பட்டி, ஜன.12: ``வருகிற தேர்தலில் நோட்டாவைவிட அதிக வாக்குகள் வாங்குவது பா.ஜ.க.வுக்கு நல்லது. தமிழகத்தில் தாமரை மலரப் போவதில்லை’’ என்று தமிழிசைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்தார். தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இல்லை என்றும், இதனால் தாமரை மலரும் என்றும் அதிமுக அரசுக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி நடக்கிறதா, இல்லையா என்பதை மக்கள்தான் கூறவேண்டும். தமிழிசை போன்றவர்கள் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை. ஜெயலலிதா மறைவுக்குபின் அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். வருகிற தேர்தலில் நோட்டாவைவிட அதிக வாக்குகள் வாங்குவது பா.ஜ.க.வுக்கு நல்லது.